திருப்பூரில், சுடுகாட்டில் உடல்களை புதைக்க இடம் இல்லாததால் அடக்கம்
செய்யப்பட்ட பிணங்களை, வெளியே எடுத்து போட்டு உடல்களை புதைத்து
வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில், 7 சென்ட்
நிலத்தில் பொது சுடுகாடு உள்ளது. இதில் விஜயன் என்பவர் 25 ஆண்டுகளாக உடல்களை புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 200 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்த நிலையில், தற்போது 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
வாரத்தில் 5 சடலங்கள் இந்த சுடுகாட்டில் புதைக்கப்படும் நிலையில், உடல்களை புதைக்க இடம் இல்லாததால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட உடல்களை வெளியே எடுத்துவிட்டு, புதிய உடலை புதைத்து வருகின்றனர். இதன் காரணமாக சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் பரவி உள்ளது. மேலும், இதனை நாய்கள் வெளியே இழுத்துச் சென்று போடும் நிலை உள்ளது.
ஏற்கனவே அழுகிய நிலையில் உள்ள உடல்களை நாய்கள் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு இழுத்துச் செல்வதால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பெண்கள் குழந்தைகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அழுகிய உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.







