கடந்த 45 நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 45 நாட்களில் மட்டும் ரூ. 4.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்…

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
கடந்த 45 நாட்களில் மட்டும் ரூ. 4.98 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய
சுவாமி திருக்கோயிலில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி,  தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும்
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  மேலும்
கடந்த மாதம் நடைபெற்ற வைகாசி விசாகத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள்
பாத யாத்திரையாக வந்து கோயில் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வேண்டுலை
நிறைவேற்றினர்.

இந்தநிலையில் கடந்த 45 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.  கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில்,  உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம்,  பீடம் குருகுல வேத பாடசாலை, உழவார பணி குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டனர்.

இதில் கடந்த 45 நாட்களில் மட்டும் ரூ. 4 கோடியே 98 லட்சத்து 7 ஆயிரத்து 405 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.  மேலும் 1400 கிராம் தங்கமும், 500 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.  மேலும் 851 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.