புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் தொடர்பான பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கல்லூரிகளும் வருகிற 16-ந்தேதி முதல் திறக்கப்படும் என்றார். மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.







