தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் அரசு அறிவித்திருந்த நிலையில், அதை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தியது குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினர்.
அந்த ஆணையம் தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, கடந்த அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








