10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்

10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத…

10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் விசாரணை அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.

அப்போது, 10.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், 10.5% உள் ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.