கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோயிலில், குடமுழக்கு
விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
கோவையில், மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான ஈச்சனாரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குருமரகுருபர சுவாமிகள் தலைமையில் சிறப்பு வேள்வியாக பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.
தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், மேளதாளங்கள் முழங்க கோயிலை சுற்றி புனித நீர் எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள்
முழங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது. இதனையடுத்து பக்தர்களுக்கு
ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஈச்சனாரி விநாயகருக்கு
சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி
தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறநிலையத்துறை
சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு
200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கு. பாலமுருகன்







