“பதற்றத்தை தணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – இஸ்ரேலுக்கு #China வலியுறுத்தல்!

பதற்றத்தை தணிக்கவும், மோதல் தீவிரமடைதல் அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – லெபனான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல்…

பதற்றத்தை தணிக்கவும், மோதல் தீவிரமடைதல் அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் – லெபனான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சூழலில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் பலர் கொல்லப்படுவதால், இந்த போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

அந்தவகையில், மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றங்களைத் தணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதற்றத்தை தணிக்கவும், மோதல் தீவிரமடைதல் அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லெபனானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் மீதான தாக்குதலை எதிர்க்கிறோம். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது” என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விரோதத்தைத் தூண்டும் மற்றும் பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் அதனை எதிர்ப்பதாக சீனா கூறியுள்ளது. மோதல் தீவிரமடைந்திருப்பதால் சீன மக்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என்றும் சீன அரசு தனியாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.