நீலகிரியில் சட்டவிரோதமாக இயங்கும் தார் கலவை ஆலைகளை மூட
உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த ராமானுஜம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேவாலா அருகே கலவை இயந்திரங்களை பயன்படுத்தி சூடான தார்
கலவைகள் உருவாக்கப்படுகிறது. இந்த சூடான கலவையை இரண்டு தனியார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இந்த 2வது கலவை ஆலையை நிறுவ தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எவ்வித அனுமதியும்
பெறாமல், சட்டவிரோதமாக ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக ராமானுஜம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு ஆலைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அருகில் உள்ள கிராமங்களின் நீர் ஆதாரங்கள் பாதிப்பதாகவும், காற்று மாசடைந்து பொதுமக்களுக்குச் சுவாச பிரச்சனை ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு ஆலைகளும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை மீறிச் செயல்படுவதாகவும்,
விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே பொது மக்களுக்கு உடல் நல கேடு விளைவிக்கும்
தார் கலவை இயந்திர ஆலையை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மனுவில்
தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.







