இந்திய ஐஐடிகள் தொடர்ந்து இட ஒதுக்கீட்டு மீறல்களை செய்து வருவதாக மதுரை
நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்களவையில் ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி,
எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர்
விண்ணப்பித்தார்கள்? இட ஒதுக்கீடு பிரிவினருக்கான இடங்கள் எவ்வளவு காலியாக
உள்ளன? என்ற கேள்வியை நான் எழுப்பி இருந்தேன்.
அதற்கான 29 பக்கங்கள் கொண்ட பதிலை ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ்
சர்க்கார் அளித்துள்ளார்.
அதில் தரப்பட்டுள்ள தகவல்கள் எப்படி முனைவர் பட்ட அனுமதிகள் எஸ்.சி, எஸ்.டி, ஓ
பி.சி பிரிவினருக்கு அநீதியை இழைக்கின்றன என்பதை விவரிக்கிறது. இட ஒதுக்கீடு
அடியோடு சிதைக்கப்பட்டுள்ளது. போதுமான விண்ணப்பதாரர்கள் இருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. வழக்கமாக அரசு சொல்லும் காரணமும் இங்கே அடிபட்டு போயிருக்கிறது.
இட ஒதுக்கீடு நெறிகளின்படி ஐ.ஐ.டிக்கள் எஸ்.டி 7.5 சதவீதம், எஸ்.சி 15
சதவீதம், ஓ.பி.சி 27 சதவீதம் இடங்களை தந்திருக்க வேண்டும்.
அமைச்சர் தந்துள்ள தகவல்களின்படி எஸ்.டி பிரதிநிதித்துவம் 2.5 சதவீதமாகவே
இருக்கிறது. 3,430 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டிகளிலும் சேர்த்து
மொத்தம் 137 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எந்த ஐ.ஐ.டியுமே உரிய
பிரதிநிதித்துவத்தை தரவில்லை. மூன்று ஐ.ஐ.டி க்கள் (கோவா, பிலாய், திருப்பதி)
முறையே 30, 31, 93 விண்ணப்பங்களை வரப் பெற்றும் அவர்கள் அனுமதி தந்தது ஜீரோ
சதவீதம்.
எஸ்.சி பிரதிநிதித்துவம் 10 சதவீதமாகவே இருக்கிறது. 17,075 விண்ணப்பதாரர்கள்
இருந்தும் எல்லா ஐ.ஐ.டிகளிலும் சேர்த்து மொத்தம் 574 பேருக்கு மட்டுமே அனுமதி
கிடைத்துள்ளது. எல்லா ஐ.ஐ.டிகளுமே- கோவா, தன்பாத் தவிர – உரிய எஸ்.சி
பிரதிநிதித்துவத்தை தரவில்லை.
சென்னை ஐ.ஐ.டியில் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் முனைவர் பட்ட அனுமதிகளில்
மிக மிகக் குறைவாக உள்ளது. மொத்தம் 558 மாணவர்கள் முனைவர் பட்ட அனுமதிகளை
பெற்றுள்ள நிலையில் 53 மாணவர்கள் மட்டுமே (9.5 சதவீதம்) எஸ்.சி பிரிவை
சார்ந்தவர்கள். 20 பேர் மட்டுமே (3.6 சதவீதம்) எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள்.
ஆனால் எஸ்.சி மாணவர்கள் 1,637 பேரும், எஸ்.டி மாணவர்கள் 346 பேரும் தகுதி பெற்ற
விண்ணப்பதாரர்களாக இருந்துள்ளனர். எஸ்.சி மாணவர் இடங்கள் 23, எஸ்.டி மாணவர்
இடங்கள் 13 காலியாக விடப்பட்டுள்ளன.
கல்வி நிறுவன நிதியில் இருந்து நடத்தப்படும் பிரிவுகள் மட்டுமின்றி
திட்டம்/வெளி ஆதரவு நிதி மூலம் நடத்தப்படும் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு
அமலாகவில்லை.
ஓ.பி.சி இட ஒதுக்கீடும் ஓரளவே தரப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐ.ஐ டி மட்டுமே
விதி விலக்காக உள்ளது. இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான குறைந்தபட்ச சதவீதமே ஆகும். அதை எட்டவே இந்த பாடு. சட்டம் வந்து 16 ஆண்டுகள் கழித்தும் இதுவே நிலைமை.
அரசு சட்டத்தின் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். நேர்மையான ஆய்வை,
விசாரணையை செய்து மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த
அறிக்கையில் சு. வெங்கடேசன் எம் பி கோரியுள்ளார்.








