சென்னை ஐஐடியில் தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகளை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சென்னை ஐஐடியில், சாதி தீண்டாமை கொடுமைகள் காரணமாக மர்ம மரணங்களும், உயிரிழப்புகளும் நடந்து வருவதாகவும், இதனை விசாரிக்க தமிழக அரசு தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி குமரன், அண்மையில், சென்னை ஐஐடியில் பணிபுரிந்த உன்னி கிருஷ்ணன் நாயர் என்பவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். ஐஐடியில் சாதிய பாகுபாடு அதிக அளவில் இருப்பதாக அங்கு படிக்கும் மாணவர்களே தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். எனவே இங்கு நடக்கும் உயிரிழப்புகளை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







