சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா உயிரிழப்பு வழக்கை துரிதப்படுத்த தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக மாணவியின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதி அறையில் திடீரென அவர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் மற்ற மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கடந்த ஓராண்டாக சி.பி.ஐ விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக பாத்திமாவின் தந்தை லத்தீப் கொச்சியிலிருந்து சென்னை வந்தார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தன்னுடைய மகளின் செல்போனில் குற்றவாளிகள் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் அது குறித்து சி.பி.ஐ அதிகாரிகளிடம் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார். பாத்திமா வழக்கை துரிப்படுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் லத்தீப் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாத்திமாவின் தந்தை லத்தீப் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி, தனது மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரிக்கை வைத்திருந்தார். அதன்பிறகு டெல்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அனைச்சர் அமித்ஷா ஆகியோரையும் கேரிக்கை வைத்திருந்தார். அதன்பிறகு, பாத்திமா உயிரிழப்பு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.








