இந்தியாவிலே அனைத்து வகையிலும் சிறந்த உயர்கல்வி நிறுவனம் என்ற இடத்தை
மீண்டும் தக்கவைத்தது சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நிறுவன தரவரிசை
கட்டமைப்பு (NIRF) தொடங்கப்பட்டது.
இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல்,
கற்பித்தல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில் முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு
முடிவுகள், உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கி தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
ஒட்டு மொத்தமாக பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், என்ஜினீயரிங்,
மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் என பல்வேறு
பிரிவுகளில் சிறந்த நிறுவனங்களின் தரவரிசையை NIRF வெளியிடுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வரும்
நிலையில், 2022-ம் ஆண்டுக்கான NIRF தரவரிசை பட்டியலை மத்திய மனித வள
மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள 100 கல்வி நிறுவனங்களில்,
சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தை பெற்றிருக்கிறது. 2-வது இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும், 3-வது இடத்தில் மும்பை ஐ.ஐ.டி.யும் உள்ளது.
இந்த தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை அம்ரிதா விஷ்வா வித்யபீடம் 16-வது
இடத்திலும், வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(வி.ஐ.டி.) 18-வது இடத்திலும்,
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 21-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம்
22-வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 24-வது இடத்திலும்
இருக்கிறது.
இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 4-வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2018-ம் ஆண்டு 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த ஆண்டில் 25-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம், இந்த
ஆண்டு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. பல்கலைக்கழக பட்டியலை பொறுத்த வரையில், 100 பல்கலைக்கழகப் பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
அந்த வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த அம்ரிதா விஷ்வா வித்யாபீடம் 5-வது
இடத்திலும், வி.ஐ.டி. 9-வது இடத்திலும், பாரதியார் பல்கலைக்கழகம் 15-வது
இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 19-வது
இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 20-வது இடத்திலும் இருக்கிறது.
கல்லூரிகளின் தரவரிசையில் டெல்லி மிராண்டா ஹவுஸ் நிறுவனம் முதல் இடத்தை
பெற்றிருக்கிறது.
இதே வரிசையில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடத்திலும், லயோலா கல்லூரி 4-வது
இடத்திலும் என சில கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
ஆராய்ச்சி நிறுவன தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டி. 2-வது
இடத்தையும், வி.ஐ.டி. 10-வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 21-வது
இடத்தையும் பெற்றுள்ளது.
என்ஜினீயரிங் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், 100 கல்வி நிறுவனங்களில் முதல்
இடத்தை சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 5-வது முறையாக தக்க வைத்துள்ளது.
இதில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 8-வது இடத்திலும், வி.ஐ.டி. 12-வது
இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 17-வது இடத்திலும் உள்ளது.

இதேபோல், மேலாண்மை பிரிவில் சென்னை ஐ.ஐ.டி. 10-வது இடத்திலும், பார்மசி
பிரிவில் ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி 6-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 12-வது இடத்திலும், அண்ணாமலை
பல்கலைக்கழகம் 15-வது இடத்திலும், பல் மருத்துவம் பிரிவில் சவீதா மருத்துவம்
மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் முதல் இடத்திலும், எஸ்.ஆர்.எம். பல்
மருத்துவ கல்லூரி 8-வது இடத்திலும், சட்டப் பிரிவில் சவீதா மருத்துவம் மற்றும்
தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 14-வது இடத்திலும், தஞ்சாவூர் சண்முகா கலை
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கல்வி 19-வது இடத்திலும்,
கட்டிடப்பிரிவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 5-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 11-வது இடத்திலும் என்று தமிழ்நாட்டை
சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
மருத்துவம் சார்ந்த தரவரிசையில், வேலூர் கிறிஸ்தவ கல்லூரி 3-வது இடத்தையும்,
அம்ரிதா விஷ்வா வித்யபீதா 8-வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 12-வது
இடத்தையும், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 15-வது
இடத்தையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 20-வது
இடத்தையும் பெற்றிருக்கிறது.
இதில் சென்னை மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் முன்னேறியுள்ளது
குறிப்பிடத்தக்கது.







