பாலாற்றில் அணைக்கட்டும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டால் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு துரிதப்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் 15 மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், அண்மையில் மழை பெய்தபோது வெள்ளம் ஏற்பட்டதுபோல், இனி வரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறினார்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை கட்ட ஆய்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாலாற்றில் அணைக்கட்டும் பணிகளை ஆந்திர அரசு செயல்படுத்தினால், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு துரிதப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
சட்டம் ஒழுங்கு ஏற்படும் என்பதால்தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் அனைத்து ஊர்வலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்த அவர், எளாவூர் 7 கண்பாலத்தில் தடுப்பணை கட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்








