ஆசிரியர்களை தொந்தரவு செய்தால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவது அதிகரித்துவிட்டது, அதைத் தடுக்க வேண்டும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே தனிக்கவனம் செலுத்தி மாணவர்கள் வழி தவறுவதை தடுக்க பள்ளிகல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்து பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “மாணவர்களின் வீடியோக்களை சமூகவலைதளங்களில் போடுவதால், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. மாணவர்களின் வீடியோக்களை போட்டால் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், “வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு எனக் கூறிய அமைச்சர், “பள்ளிகள் – பெற்றோர்கள் – அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது எனவும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-யிலும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்றும் அறிவித்தார்.