”மோடியை எதிர்த்து திமுக போட்டியிட்டால் நானே திமுகவை ஆதரிக்கிறேன்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“ 37 விழுக்காடு வாக்கை வாங்கிவிடுவோம் என பேசும் அண்ணாமலைக்கு கூட்டணி தேவையா..? தனித்து நின்றே ஆட்சி அமைக்கலாமே. வெறுப்பின் விதை, பூ, செடி,காய் எல்லாமே அண்ணாமலை தான். நான் முன்வைப்பது மொழி, இன அரசியல்தான். எதிர்ப்பு அரசியல் இல்லை என்றால் எதற்கு இத்தனை மாநிலங்கள் பிரிந்தது..?
நான் பேசுவது வெறுப்பு அரசியல் எனில் இஸ்லாமியர்களை எதிர்த்தே பேசுவது விருப்ப அரசியலா? இந்தியாவை இனிமேல் தான் காங்கிரஸ் புதிதாக வந்து ஆளப்போகிறதா? பிஜேபி ஆளப்போகிறதா? . சந்திரனுக்கு சந்திராயன் விடுகிறேன், சூரியனுக்கு ஆதித்யா விடுகிறேன் என்கிறார்கள். முதலில் ஒழுங்காக சாலையில் பேருந்தை விடுங்கள்.
அதிமுக திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டைதான். திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்து வந்தவன் தான் நான். திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழருக்கும் இருப்பது சகோதர யுத்தம். திமுகவை வீழ்த்துவதற்கு எனக்கு அண்ணாமலை எதற்கு?
திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல, தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. நாம் தமிழர் என்பதே சாதி ஒழிப்பு தான்.
50 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது. கோவையில் உள்ள எந்த விளம்பர பலகையிலாவது தமிழ் உள்ளதா..?
வள்ளுவர் காலத்தில் இந்து என்ற பெயரே கிடையாது. இந்து என்பதற்கு தமிழில் நிலவு என்ற பொருள். காவிரியில் தண்ணீரை தராத காங்கிரசை திமுக ஆதரித்து பேசினீர்கள். தண்ணீரை தரவில்லை என்றால் தொகுதி பங்கீடு இல்லை என திமுக கூற வேண்டும்.
ராமேஸ்வரத்தில் நரேந்திர மோடி போட்டியிட்டால் எதிர்த்து நான் போட்டியிடுவேன். மோடி ஒருவேளை ராமேஸ்வரத்தில் போட்டியிடும்போது, திமுக அவரை எதிர்த்து போட்டியிட்டால், நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், திமுகவை ஆதரிக்கிறேன்.
இந்தியா ஒரே நாடா? இதற்கு அண்ணாமலை பதில் கூற வேண்டும். அண்ணாமலை முதலில் அதனை ஆய்வு செய்ய வேண்டும்.” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.