தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள ஆசிரியர் ராமச்சந்திரன்பள்ளி மாணவர்களின் சீருடை அணிந்து தான் தேசிய விருது வாங்குவேன் எனட் தெரிவித்துள்ளார்.
ஆசிரியராகப் பணியாற்றி , சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும்,பணியாற்றி மறைந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதே போல் தமிழகத்தில் மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.
இந்த தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை ஒவ்வொரு மாநில அரசும் பரிந்துரை செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில் நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்தும் 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் தான் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களுக்கு வரும் செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.
இதுகுறித்து நியூஸ்7 தமிழுக்கு ஆசிரியர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார் அதில் கூறியதாவது, “இந்த விருதானது எனது அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட விருதாகவே நினைக்கிறேன், இந்த விருதை நான் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஒட்டுமொத்த அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றமே எனது வாழ்நாள் இலக்காக தீர்மானித்துள்ளேன். நான் எனது வகுப்பறை, எனது பள்ளி, எனது கிராமம் மட்டுமின்றி மூவலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைந்த கல்வித்திறன் மேம்பாட்டிற்காக அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறேன்.
பள்ளி வேலை நாட்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும் இரவு 7 மணிக்கு மேல் தான் நான் எனது வீட்டிற்கே செல்ல முடிகிறது. எனது மாத வருமானத்தில் குறைந்த பட்சமாக 80 சதவீதத்திற்கும் மேலாக அரசுப் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுகிறேன். இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்ற எனது மனைவிக்கு நன்றி. இந்து விருது எனக்கு கிடைக்க பரிந்துரை செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி என்பது சாதனையாளர்களின் கூடாரம். பெருமையின் அடையாளம், என்று நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார் அது உண்மையே” எனக் கூறினார். மாணவர்களைப் போன்றே பள்ளிக்கு சீருடையுடன் வரும் ஆசிரியர், சீருடை அணிந்து தான் ஜனாதிபதியிடம் விருது வாங்குவேன் எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான சேவையில் ஆசிரியர்
6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை students skills என்ற பெயரில் யூடியூபில் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எனத் தனியாக கணக்கு தொடங்கி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வருகிறார். அரசின் திட்டங்களான எண்ணும் எழுத்தும் உள்ளிட்டவற்றையும் சிறப்புற கற்பித்து, யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
கொரோனா காலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் விளிம்புநிலை குழந்தைகளின் கல்வி தடைபட்டது. இதையடுத்து அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இணைய வழி கல்வி கிடைக்கும் வகையில் தனது சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்து மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கும் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்குப் பயிற்சி வழங்கி வருகிறார். இப்படி பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் அவருக்கு தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.







