தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என காவலர் ஒருவர் மிரட்டுவதாகவும், இந்த விவகாரத்தில் உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு காவலர் சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என்றும் கலைச்செல்வி கோரிக்கை வைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கலைச் செல்வி. இவரது சொந்த ஊர் வால்பாறை. கடந்த 2009-ஆம் ஆண்டு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் மதுபழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணியன் தினமும் மது அருந்திவிட்டு கலைச்செல்வி மற்றும் பெண் குழந்தைகளை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கலைச்செல்வி தனது குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு நாச்சிபாளையத்திற்கு தனியாளாக குடிபெயர்ந்து அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலைச் செல்வியின் வீட்டருகே வளர்ப்பு நாய் ஒன்று விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சண்முகம் விசாரிப்பதற்காக அங்கு சென்றிருக்கிறார். அப்போது, கலைச்செல்வியின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட சண்முகம் அவ்வப்போது பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் நேரடியாக கலைச்செல்வியின் வீட்டிற்குச் சென்ற சண்முகம் கலைச்செல்விடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்த கலைச்செல்வியிடம், திருமணம் செய்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். மேலும், சண்முகம் தனது பெற்றோருடன் கலைச்செல்வியை செல்போனில் பேச வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கலைச்செல்வியும் சண்முகம் திருமணம் செய்துக்கொண்டு இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சண்முகம் ரகசியமாக யாரிடமோ அவரது செல்போனில் பேசி வந்திருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த கலைச்செல்வி சண்முகத்தின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் பெண் காவலர் ஒருவருடன் காவலர் சண்முகம் மணிக்கணக்கில் காதல் ரசம் சொட்டச் சொட்ட பேசியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கலைச்செல்வி கணவர் சண்முகத்திடம் கேட்டு சண்டையிட்டிருக்கிறார்.
அண்மைச் செய்தி: நாடுதழுவிய வேலைநிறுத்தத்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி
இதனையடுத்து காவலர் சண்முகம் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இதனால், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற கலைச்செல்வி, காவலர் சண்முகம் தன்னை திருமணம் செய்துக்கொண்டு தன்னிடம் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தற்போது வேறொரு பெண் காவலரோடு தொடர்பில் இருப்பதாக புகார் அளித்திருக்கிறார். ஆனால், சண்முகம் காவலர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கலைச்செல்வி குற்றம்சாட்டுகிறார்.
மேலும், இது குறித்து வெளியே புகார் தெரிவித்தால் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று காவலர் சண்முகம் மிரட்டுவதாகவும் அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு காவலர் சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என்றும் கலைச்செல்வி கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







