நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழி

சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே…

சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா மற்றும் ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை இதே திடலில் நடைபெறும் நெய்தல் கலை விழா குறித்த முன்னேற்பாடு பணிகளை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து புத்தகத் திருவிழா நடைபெறும் மைதானத்தை பார்வையிட்ட அவர் , பிரம்மாண்ட பலுானை பறக்க விட்டு, நெய்தல் விழா குறித்த விளம்பரத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்பி, தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா நடைபெறவுள்ளது. கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய தொல்லியல் இடங்கள் அமைந்துள்ளன.

எனவே நமது மாவட்டத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். அந்த அரங்கத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது என்பது குறித்து புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் மீது சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே தமிழக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பி வரும் வருகின்றனர். விரைவில் தானும் தனது வழக்கறிஞர் மூலமாக நிச்சயமாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்புவேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையாளர் தினேஷ் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.