சித்திரம் பேசுதடி படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் அழுதிருக்கிறேன் என யூகி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.
ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’யூகி’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் கதிர், பவித்ரா லட்சுமி, ஆனந்தி, நட்டி நட்ராஜ், நரேன், தயாரிப்பாளர் பிரபு திலக் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை பவித்ரா லக்ஷ்மி, ”இந்த படம் ரொம்ப சிறப்பானது. இரண்டு மொழிகளில் படம் பண்ணும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் மிகவும் பாக்கியசாலி. முதல் படத்தில் இருந்து நான் வேலை செய்த அனைவரும் மிகவும் அனுபவசாலிகள். இப்போதுதான் நடிக்க வந்துள்ளேன். டிவியில் இருந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட ஒரு புதுமுகம் மாதிரிதான். நன்றி சொல்வதை தவிர வேறு வார்த்தை இல்லை” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் நட்டி நட்ராஜ், “இந்த மாதிரியான படங்களுக்கு வெளியில் இருந்து வரும் சப்போர்ட் குறைவாக தான் இருக்கும். மொத்த படமே கஷ்டம் தான். இரண்டு மொழிகளில் செய்துள்ளோம். வாடகைத் தாய் மட்டுமே பிரச்னை இல்லை. உறவுகள் போன்ற பிரச்னைகளும் இதில் இருக்கும்” என்றார்.
நடிகர் நரேன் பேசுகையில், “எனக்கு நிறைய போலீஸ் கதாபாத்திரம் தான் வருகிறது. இது எனது முதல் இருமொழி படம். முதலில் இப்படத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை. கதை கேட்டபிறகு ஓகே சொல்லிவிட்டேன். இறுதிவரை த்ரில்லிங்காக போகும். அதுதான் இப்படத்தின் ப்ளஸ். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. திரையரங்கு வெளியீட்டுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. சித்திரம் பேசுதடி படம் நடித்த போது திரையரங்குகள் கிடைக்காமல் அழுதுகொண்டு இருந்தேன்” என்று கூறினார்.

அவரை அடுத்து பேசிய நடிகை கயல் ஆனந்தி, ”இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நடிக்கும் போது நிஜமாகவே நான் கர்ப்பமாக இருந்தேன். மிகவும் அழுத்தமான கதை இது. ரொம்ப நல்ல படமாக இருக்கும். மலையாளத்தில் பேசி நடித்தது சவாலாக இருந்தது. ஒரு கதையை இரண்டு மணி நேரம் கேட்டபிறகுதான் நடிக்க சம்மதிப்பேன். இக்கதையை போனில் கேட்ட ஒருமணி நேரத்திலேயே ஓகே சொல்லிவிட்டேன்” என்றார்.

இறுதியாக பேசிய நடிகர் கதிர், “கொரோனா காலத்தில் கேட்ட கதை தான் இது. வாடகைத் தாய் சம்பந்தப்பட்ட கதை இது. சுழல் படத்திற்கு பிறகு போலீஸ், க்ரைம் த்ரில்லர் கதைகளை கேட்க வேண்டாம் என்று இருந்தேன். நடிக்க வேண்டாம் என்ற முடிவுடன்தான் இக்கதையை கேட்டேன். ஆனால் இறுதியில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார்.







