என் பாதை வேறு, அப்பாவின் பாதை வேறு அவர் லெவலுக்கு என்னால் வர முடியாது என இராவணக் கோட்டம் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகரும், இயக்குநர் பாக்கியராஜ் மகனுமாகிய சாந்தனு பாக்யராஜ் நடிப்பில்
இராவணக் கோட்டம் எனும் திரைப்படம் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று ஓடி வருகிறது.
இந்த நிலையில் நடித்த சாந்தனு தமிழகம் முழுவதும், திரையரங்குகளில் நேரடியாக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். கரூர் நகரில் உள்ள அஜந்தா திரையரங்கில் இராவணக் கோட்டம் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்த திரையரங்கத்திற்கு சாந்தனு வருகை தந்தார். அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இசை வாத்தியங்கள் முழங்க பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
பின்னர் திரையரங்கத்திற்குள் சென்று படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சாந்தனு தெரிவித்ததாவது..
” இராவணக் கோட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய படங்களுடன் என்னைப் போன்ற சிறிய நடிகர்ளின் படங்களையும் பார்க்க வேண்டும். எனது அப்பாவின் பாதை வேறு, என் பாதை வேறு. அவர் லெவலுக்கு என்னால் வர முடியாது.
அடுத்து கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறேன். நடிகர் விஜய் படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அதில் முழு கவனத்தை செலுத்தி வருகிறேன்” என சாந்தனு தெரிவித்தார்.







