மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கும் திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக ஆக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் 9 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், இராஜராஜன், சங்கரன், வனிதா, ஆசிர் பாக்கியராஜ் என 9 விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கினார். இதனைதொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் பக்கம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த விஞ்ஞானிகள் இவர்கள். மகாகவி பாரதி இருந்திருந்தால் இந்த 9 விஞ்ஞானிகள் பிறந்த தமிழ்நாடு என பாடியிருப்பார். இவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள் ஆகும். அறிவியல் மேதையான உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.இந்த நாட்டில் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் ஏன் உருவாகவில்லை என அண்ணா கேட்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் இத்தனை அறிவியல் மேதைகள் உருவாகி இருக்கிறார்கள் என்பதை காட்டவே அண்ணா நூலகத்தில் இந்த விழாவை வைத்துள்ளோம். விருது பெறும் விஞ்ஞானிகள் 9 பேரில் 6 பேர் அரசு பள்ளியில் பயின்றவர்கள். அதில் 2 பெண்கள் உள்ளனர். இந்த மேடை சமூக நீதிக்கான அடையாளமாக உள்ளது.
தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தினர், விருது பெறும் விஞ்ஞானிகளை தான் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்தி கொடுத்து 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். அறிவுக்கான அளவுகோள் என்று எதுவும் இல்லை, இது உழைப்பிற்கானது.எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தைப் பற்றி அனைவரும் அறிவீர்கள்.
மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கும் திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக ஆக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கி இருக்கிறோம். அவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருகின்றன. அதற்குத் தகுதியானவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல் அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிகமிக பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன்.பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம். 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்வி உதவித்தொகைப் பெற்று இளநிலை பொறியியல் படிப்பினை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பினை தொடரும் மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகளின் பெயரில் அமைக்கப்படும் உதவித் தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.