‘அதிமுகவில் இணைய நான் ரெடி’ … ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும் – ஓபிஎஸ் பேட்டி!

அதிமுக கட்சியில் மீண்டும் இணைய நான் தயாராக இருக்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், “சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அதிமுக தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாங்கள் தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் தேர்தலில் போட்டியிடுவதும் குறித்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் திமுகவில் சேரவுள்ளதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. 2வது தர்மயுத்தத்துக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் தான் காரணம்.

தேனி மாவட்ட நிர்வாகிகள் எங்கும் செல்லவில்லை, இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களின் மனதின் குரல்களை தெரிந்துகொள்ள கூட்டம் கூட்டப்பட்டது. தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட தொண்டர்கள் தயார் என்று கூறியிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் அழைப்பு விடுத்திருக்கிறார். எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். டிடிவி தினகரனும் அந்தக் கோரிக்கையை அங்கு வலியுறுத்தினால், நாங்கள் இணையலாம். அந்த வேலையை செய்தால் அதிமுக மாபெரும் வெற்றியடையும். என் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவே ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக 6 ஓபிஎஸ்-களை தேர்தலில் நிறுத்தியது, நான் தோல்வியடைய வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட சதி. கட்சியில் மீண்டும் இணைய நான் தயாராக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி இதற்கு ரெடியாக உள்ளாரா? ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.