நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

காதல் பாடல்களில் களை கட்டிய கண்ணதாசன், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களையும் தந்துள்ளார். குழந்தைகள் என்றால் எனக்கு உயிர்… அதனால்தான் தாய்மார்கள் எனது பாடலுடன் போட்டி போடுகின்றனர் என்கிறார் கண்ணதாசன். இன்றும் கொண்டாடப்படும் பாசமலர் திரைப்படத்தில்…

காதல் பாடல்களில் களை கட்டிய கண்ணதாசன், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களையும் தந்துள்ளார். குழந்தைகள் என்றால் எனக்கு உயிர்… அதனால்தான் தாய்மார்கள் எனது பாடலுடன் போட்டி போடுகின்றனர் என்கிறார் கண்ணதாசன்.

இன்றும் கொண்டாடப்படும் பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற, நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்ற வரிகளுக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டா?.. கண்ணதாசன் மறைவின்போது அஞ்சலி செலுத்திய நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இந்தப்பாடலை சுட்டிக்காட்டி, எங்கிருந்து ஐயா இது மாதிரி வரிகள் உனக்கு வந்து விழுந்தன என கண்ணீர் சிந்தினார். அதே திரைப்படத்தில் தங்கையை தாலாட்டி தூங்க வைக்கும் பாடலான மலர்களைப்போல் பாடலில் ‘சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா’ என்ற வரிகளை கேட்டு அன்றைய தாய்க்குலம் கண்ணீர் சிந்தியது.

சிவாஜி நடித்து வெளிவந்த பா வரிசை திரைப்படங்களில், தனது பாட்டு பயணத்தில் ராஜாங்கம் நடத்தி வந்தார் கண்ணதாசன்… பெண் குழந்தைகளுக்காக ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே’ என பெண்மைக்கு தாலாட்டு பாடினார்.. சிறு வயதில் தூங்க முடியாமல் போனால் நீ எப்போதுமே உறங்க இயலாது என வயது வாரியாக குறிப்பிட்டு பாடல் வரிகளை அமைத்திருப்பார் கண்ணதாசன்…

கண்ணதாசனின் தாலாட்டு பாடல்களில் அழகும் மென்மையும் இருக்கும். அதே நேரத்தில் நகைச்சுவையான சூழ்நிலையிலும் அனுபவங்களை குறிப்பிட்டு இருப்பார் கண்ணதாசன்… குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாத காலங்களில் ஆறு பிள்ளைகள் பெற்ற தம்பதி பாடும் ‘புத்தி சிகாமணி பெத்த பிள்ளை பாடல்’ காட்சியில் நகைச்சுவை இழையோடும். அதே நேரத்தில் வரிகளை கேட்டு நாணத்தால் தலைகுனிந்த பெண்களும் உண்டு.

‘பூஞ்சிட்டு கன்னங்கள்’ என்ற பாடலில், பொங்கல் வந்தாலென்ன, தீபாவளி சிரித்தாலென்ன என்ற வரிகளை எழுதி, கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி என வறுமை வாட்டும் ஏழைகளின் வாழ்வை படம்பிடித்து காட்டியிருப்பார்.

சிறுவயதிலேயே பாடல் எழுதத்தொடங்கிய கண்ணதாசன், வீட்டில் இரவில் எல்லோரும் தூங்கியதும் அரிக்கேன் விளக்கை தலையணை அருகே வைத்துக் கொண்டு எழுத, மண்ணெண்ணை வாங்கி கட்டுப்படியாகாது என தந்தை சலித்துக்கொள்வார்… பிள்ளை படிப்பதை, எழுதுவதை ஏன் தடுக்கிறீர்கள் என தாயார் ஆதரவுக்கரம் நீட்டுவார். இதனை தனது வசந்த காலங்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

காலத்தால் அழியாத பாடல்களை தந்த கவியரசு கண்ணதாசன், அவர் எழுதியது போல நிரந்தரமானவர்தானே…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.