தெலங்கானாவிற்கு மட்டுமே ஹைதராபாத்! தலைநகரை தேடும் ஆந்திரா?

ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு பொது தலைநகராக ஹைதராபாத் இருந்து வந்த நிலையில் அந்த நடைமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  ஆந்திராவைப் பிரித்து,  தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு…

ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு பொது தலைநகராக ஹைதராபாத் இருந்து வந்த நிலையில் அந்த நடைமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 

ஆந்திராவைப் பிரித்து,  தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.  இதையடுத்து, 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மக்களவை தேர்தலுக்கு முன்,  2014 பிப்ரவரியில் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் – 2014ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதன்படி ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அமலுக்கு வந்தது.  2014 ஆம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தால் இந்த மாற்றம் நடந்தது.  ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன் பிரிவு 5(1) இன் படி,  ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக ஜூன் 2, 2014 முதல் 10 ஆண்டுகளுக்கு,  அதாவது ஜூன் 2, 2024 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு பிறகு,  ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகராக மட்டுமே இருக்கும்.  மேலும் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒரு புதிய தலைநகரம் நிறுவப்படும். இந்நிலையில் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, 10 ஆண்டு கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது.  இனி வரும் காலங்களில், தெலங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக ஹைதராபாத் இருக்கும்.

ஆந்திராவில், 2014-2019 வரை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு,  அமராவதியை தலைநகராக்க முயற்சி எடுத்தாலும் அவருக்கு பின், 2019 – 2024 மே வரை ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆர்காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி,  மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை அறிவித்தார்.  எனினும், ஆந்திராவுக்கு தலைநகர் இன்னும் நிறுவப்படவில்லை.

ஆந்திர சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில்,  வெற்றி பெறும் கட்சி,  தலைநகர் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.