உயிருக்கு போராடிய கணவன்; ஆம்புலன்ஸை சுத்தம் செய்த மனைவி – ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்…!

மத்திய பிரதேசத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நோயாளியின் குடும்பத்தினரிடம் மனிதாபிமானமற்ற நிலையில் நடந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள கரேலா என்னும் கிராமத்தை சேர்ந்த ராகுல் பர்மன் (32) என்பவர் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்துள்ளது. இதனால் ராகுல் பர்மனை மேல் சிகிச்சைக்காக  அருகிலுள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

இதனையடுத்து ராகுலை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ்ன் ஊழியரான மோகித் என்பவரை அவர்கள்  மீண்டும் அணுகியுள்ளனர். ஆனால் அந்த ஆம்புலன்ஸ் ஊழியர் அவர்களிடம் மனிதபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடி கொண்டிருந்த ராகுல் பர்மனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் அவரின் குடும்பத்தினரிடம் சம்மந்தப்பட்ட ஆம்புலன்ஸை சுத்தம் செய்யுமாறு மோகித் கட்டாயப்படுத்தியுள்ளார்.

 

இதனையடுத்து ராகுலின் மனைவி பிரமீளா பர்மன் அந்த ஆம்புலன்ஸை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காணொலி இணையத்தில் பரவியதை தொடர்ந்து மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சம்பந்தபட்ட பொறுப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் உரிய பதிலளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஆம்புலன்ஸ் சேவையை இயக்கும் தனியார் நிறுவனமும்  இதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.