“மனிதநேயமிக்க அரசியல் தலைவர் விஜயகாந்த்” என விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45 மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது..
கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தியறிந்து பிரதமர் மோடி மத்திய அரசின் சார்பில் நீங்கள் செல்ல வேண்டும் என என்னை அனுப்பி வைத்தார். விஜயகாந்தின் மனைவி, குடும்பம் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என என தெளிவான வழிகாட்டுதல்களை பிரதமர் மோடி எனக்கு வழங்கினார்.
கேப்டன் விஜயகாந்த் பலருக்கு உணவளித்து பசியை போக்கியவர். தான் மட்டுமல்ல தன்னோடு இருப்பவர்களும் சேர்ந்து வளர வேண்டும் என விரும்பியர். தனக்கு கிடைக்கும் அதே மரியாதை தன் குழுவில் இருக்கு கடைக்கோடி பணியாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என அவர் தொடர்ந்து செயல்பட்டார்.
தமிழ்நாடு அரசியலில் மனிதநேயமிக்க ஒரு அரசியல் தலைவர் அவர். விஜயகாந்த்தின் இழப்பை எப்படி ஈடு செய்வதென தெரியவில்லை. அவரது துணைவியார் பிரேமலதா விஜயகாந்த்தை தேற்றுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை “ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.