உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உக்ரைன் தூதரகத்தின் கோரிக்கையை ஏற்று மருந்துகள் உள்பட மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொது சபையின் 11வது அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, போரில் சிக்கி தவித்த இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்காக உக்ரைனின் அண்டை நாடுகள், தங்களின் எல்லைகளை திறந்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் இருந்து உதவி கோருபவர்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொள்ளும் இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் தன்னால் முடிந்த உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதே இந்தியாவின் நிலையான நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டார். மேலும், இருநாடுகளும் போரை கைவிட்டு அமைதியான பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது என்றும் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்தார்.