சென்னை குன்றத்தூர் அருகே வாடகை பணம் தராமல், சொந்த ஊர் செல்ல முயன்றதாக கூறி வடமாநில இளைஞர்களை சரமாரியாக தாக்கிய வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் என்பவர், தனது சகோதரர் பிரதாப் சாகுவுடன் சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் வாடகைக்கு தங்கி வசித்து வந்துள்ளார். வடமாநில இளைஞர்களை தமிழகத்திற்கு வரவழைத்து பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் பணியை சஞ்சய்குமார் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இவருடன் தங்க வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தொகை 2 லட்சத்து 85ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்திருந்ததாகவும், அவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடிவு செய்தாகவும் கூறப்படுகிறது.
இதனையறிந்த வீட்டின் உரிமையாளர் சுரேஷ் ராஜ், நிலுவை வாடகை தொகையை கேட்டு அந்த இளைஞர்களை பிளாஸ்டிக் பைப்பால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டின் உரிமையாளர் சுரேஷ்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







