கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னையில் நடந்து வந்த மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டியில், மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபட்டனர்.
கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என்று பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துறையினர் பிக்பாஸ் நடைபெறும் அரங்கத்திற்கு சென்று, நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அதில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த நடிகர், நடிகைகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நேற்றிரவு அதிரடியாக வெளியேற்றப்பட்டு பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் தற்போது ஈவிபி பிலிம் சிட்டிக்கே சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.







