இந்தி தெரியாது போடா என்ற வைரல் வரிகளை நாசுக்காக கையில் எடுத்த கன்னட நடிகரும், ஈ படத்தின் வில்லனுமான கிச்சா சுதீப் நெட்டிசன்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
இந்தி தேசிய மொழி இல்லை என கன்னட திரைப்பட விழா ஒன்றில், ஈ திரைப்படத்தின் வில்லனாக நடித்த கிச்சா சுதிப் பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு கவுன்டர் கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்திதான் தேசிய மொழி, இல்லையெனில் நீங்கள் ஏன் உங்கள் மொழிப் படங்களை இந்தியில் ஏன் டப் செய்கிறீர்கள் என சூடாக கேட்டார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, இந்தி படங்களை பின்னுக்கு தள்ளி, கேஜிஎப்2 அமோக வசூல் செய்து வருகிறது. இந்த வயிற்றெரிச்சல்தான் நடிகர் அஜய் தேவ்கனை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என கடுமையாக சாடினார்.
இதனை கையில் எடுத்துக்கொண்ட, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்டி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கன்னட நடிகர் கிச்சா சுதிப் கூறிய கருத்து உண்மைதான். இந்தி தேசிய மொழி அல்ல. இந்திய மொழிகள் என்ற பூங்காவில் இந்தியும் ஒன்று. அவ்வளவே. பல தரப்பட்ட கலாச்சார பூமியை யாரும் சீரழிக்க முயல கூடாது எனவும், பாஜகவின் ஊதுகுழல் போல் நடிகர் அஜய் தேவ்கன் பேசியுள்ளார் என வறுத்தெடுத்துள்ளார்
இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் #HindiIsNotNationalLanguage என டிரென்டிங் செய்து வருகின்றனர். ஏற்கனவே மார்வாரி, ராஜஸ்தானி, போஜ்பூரி போன்ற மொழிகளை அழித்துவிட்டீர்கள். இந்த வரிசையில் எங்களது தாய்மொழியையும் கொண்டு வர வேண்டாம் என தென்னிந்தியர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீண்டும் மொழிப்போர் என எண்ணத் தோன்றுகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இப்படி நடிகர் அஜய் தேவ்கானை பலரும் வறுத்தெடுத்து வருவதால், சுதாரித்துக்கொண்ட அவர், நீங்கள் என் நண்பர், தவறான புரிதலை நீக்கியதற்கு நன்றி, நான் எப்போதுமே சினிமாத்துறையை ஒன்றாகதான் பார்க்கிறேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம். எங்கள் மொழியை எல்லோரும் மதிக்க வேண்டும் என கருதுகிறோம் என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டுவிட்டரில் ஜகா வாங்கிய பின்னரே, இணையதள வாசிகள் அமைதி மோடுக்கு திரும்பி வருகின்றனர்.