உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியால் பாதிக்கப்பட்டு விடுபட்டிருந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் இராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற 10ஆம் தேதிக்குள் கோவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். தொடர்ச்சியாக எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை முதலமைச்சர் துவங்கி வைத்து வருகிறார். கோவை மாவட்டம் முதலமைச்சர் மனதில் இடம் பிடித்த மாவட்டம்.” என்று கூறினார். மேலும்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெறாமல் விடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கும் முறையான ஆய்வுக்கு பின் இழப்பீடு விரைந்து வழங்கப்படும். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இழப்பீடு தொகையை 2 மடங்கு உயர்த்திக் கேட்கிறார்கள்.
ஆனால் அது போன்று கேட்பவர்கள் நீதிமன்றம் மூலம்தான் அணுக வேண்டும். சில அமைப்புகள் விவசாயிகளை தவறான பாதையில் அழைத்து செல்கிறார்கள்.” என்று கூறினார் தொடர்ந்து பேசிய அவர்,
“கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது ஆரம்ப கட்டமாக தேவைகேற்ப படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் கூடுதலாக தேவைகேற்ப படுக்கை வசதியை ஏற்படுத்துவோம். டாஸ்மார்க் பார் டெண்டர் எடுப்பது தொடர்பாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு, முறையாக விண்ணப்பத்தவர்களுக்கு நேர்மையான முறையில் டெண்டெர் நடைபெற்று இருக்கிறது.
எந்த வித தவறுகளும் இல்லாமல் முறையாக டெண்டர் நடைபெற்றது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் டெண்டர் புள்ளிகள் கோரப்பட்டு டெண்டர் நடைபெற்றது. வெளிப்படை தன்மையோடுதான் டெண்டர் நடைபெற்றது. தென்மாவட்டங்களில் ஜல்லிகட்டு நடைபெற்றால் ,கோவையிலும் நடைபெறும். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடும், வருகின்ற நாட்களில் கட்டுபாடுகளுக்கு ஏற்றவாறு கோவையில் ஜல்லிகட்டு நடைபெறுமா இல்லையா என்பது தெரியவரும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு,டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.