10. 5 சதவீத உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிற்படுத்தப்பட்டடோர் நல ஆணைய தலைவருடன் ஆலோசனை செய்யாமல் 10. 5 சதவீத உள்ஒதுக்கீடு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், இந்த ஆண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையில் 10. 5 சதவீத உள்ஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கின் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10. 5 சதவீத உள்ஒதுக்கீட்டு சட்டத்திற்குத் தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்பில் வழங்கப்படும் நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







