வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கான நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குனர்
அறிவிப்பாணை வெளியிட்டார். அதில் உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாப்பதற்காக,
வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக, நாய்களை இறக்குமதி செய்ய
தடை விதித்து உத்தரவி பிறப்பித்தது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப்,
பாலகிருஷ்ண பட் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள்
பாதிக்கப்படும் எனவும், எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும், புள்ளி விவரங்களும் இல்லாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டில் இருந்து
இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைபடுத்தி, பரிசோதித்த பிறகுதான் அனுமதி
வழங்கப்படுவதால், உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும்
காரணம் நியாயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து தான் இந்திய நாய்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லை என்றும் தெளிவுபடுத்தினார். அதேசமயம் வர்த்தக பயன் காரணமாக நாய்களை இறக்குமதி செய்வதை முறைப்படுத்த கூறி, மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
நாய்கள் இனப்பெருக்கம் சம்பந்தமாக தமிழ் விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு
கால்நடை மருத்துவ பல்கலைகழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திவருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரத்தில் வகுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ம. ஶ்ரீ மரகதம்







