உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து தற்போது வரை உயர் அதிகாரிகளின் வீட்டில் உதவி பணிக்கான ஆட்கள் எனப்படும் ஆர்டர்லி முறை அமலில் இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 1.20 லட்சம் பேர் காவல்துறையில் பணியாற்றுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்களில் 5,000 பேர் ஆர்டலி பணியில் இருப்பதாக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது, “ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45 ஆயிரம் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். அர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டலிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், “அரசியல்வாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது, அழிவுக்கு கொண்டு செல்லும். அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான். இது குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். ஊரில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை அகற்றும் நடவடிக்கை எடுத்துவிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது” என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது குறித்து அரசு தரப்பில், “ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளார். அப்படிப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசு தரப்பில் உத்தரவாதம் தெரிவித்துள்ளது.
காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு யு.மாணிக்கவேல் என்பவருக்கு உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டுதான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.