ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், திமுக சார்பில் நாசரும் போட்டியிடுகின்றனர். எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் சார்பாக விஸ்வநாதன் என்பவரும் போட்டியிடுகிறார். இதனிடையே தனக்கு வழங்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திரும்ப அளித்துவிட்டு வேறு சின்னம் ஒதுக்கக் கோரியிருந்தார் விஸ்வநாதன். ஆனால், கேட்ட சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஸ்வநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், டார்ச்லைட் சின்னத்தை திருப்பி அளித்துவிட்டு எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் ஆட்டோ ரிக்ஷா, தொப்பி ஆகியவற்றில் ஒன்றை கேட்டும் ஒதுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆவடி தவிர, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆட்டோ ரிக்ஷா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.