மூலிகை பெட்ரோல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்; ராமர் பிள்ளை

மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதன் கண்டுபிடிப்பாளர் ராமர் பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதன் கண்டுபிடிப்பாளர் ராமர் பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் மீது குற்றச்சாட்டு வைத்து சிபிஐ என்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. ஆனால் என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாமல் என்னிடம் சிபிஐ தோற்றுப் போனதாக தெரிவித்தார்.

இதனால் என்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் என்னிடம் தருவதற்கான விவாதம் நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. சிபிஐ என்னிடம் தோற்றுப் போனதால் சிபிஐ அதிகாரிகள் முக்கர்ஜி மற்றும் கதிரேசன் ஆகிய இரண்டு நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

அது மட்டுமில்லாமல் செவ்வாய்க்கிழமை விவாதம் முடிந்த பிறகு புதன்கிழமை
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மகள் நிஷாவிடம் என்னுடைய மூலிகை பெட்ரோல் ரகசியங்கள் அனைத்தையும் ஊடகம் முன்னிலையில் தர இருக்கிறேன். அப்போது, மூலிகை பெட்ரோல் குறித்து தொடக்கத்திலிருந்து இறுதிவரை முழுமையான விளக்கம் அளிக்கப்படும் எனவும், தனது மூலிகை பெட்ரோல் மூலம் அனைத்து வகை வாகனங்களையும் இயக்கலாம் எனவும் இதனால் பாதிப்புகள் ஏற்படாது என உறுதி அளித்தார்.

ஒரகடத்தில் உள்ள எனது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ள 40,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் ஒரு கோடி ரூபாய் லிட்டர் மூலப் பொருளையும் நிஷாவுடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார். இது பயன்பாட்டிற்கு வந்தால் ஒரு லிட்டர் டீசல் ரூ.18 க்கும் பெட்ரோல் ரூ.14 க்கும் மக்களுக்கு சென்றடையும் என கூறினார்.

இதில் வரும் வருவாயில் எனக்கு 50%, அவருக்கு 50% சதவீதம் என அனைத்தும் கையெழுத்திட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மூலிகை பெட்ரோல் மூலம், சமையல் எரிவாயு உருவாக்க முடியும் அதற்கு கூடுதலாக 200 ரூபாய் மட்டுமே செலவாகும் என கூறினார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.