சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி உயிரை மாய்த்துக் கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர். அவர் மூலம் சித்ராவை தமக்கு
நன்றாக தெரியும். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து
காவல் துறை விசாரணையின்போது சாட்சியம் அளித்துள்ளேன். ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்தேன். இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹேம்நாத்
தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருகிறார்.
அவரை வெளியே சுதந்திரமாக நடமாடவிட்டால் சாட்சிகளை கலைப்பார் என மனுவில்
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஹேம்நாத், சித்ராவின் தந்தை
மற்றும் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு
தள்ளிவைத்தார்.
-ம.பவித்ரா








