கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த கடும் பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க ஸ்பிரிங்ளர் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு அடுத்தபடியாக முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவிய கடும் உறை பனிப்பொழிவின் காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் மட்டுமல்லாமல் தேயிலைச் செடிகள் முற்றிலுமாக கருகி வருகின்றன.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் முற்றிலும் கருகி வருகின்றன. இதனால் தேயிலை சாகுபடி குறைந்து மகசூல் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பனிப்பொழிவிலிருந்து தேயிலைச் செடிகளை பாதுகாக்கவும் மகசூலை அதிகரிக்கவும் ஸ்பிரிங்லர் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு தேயிலை செடிகள் பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைச் செய்தி: கோகுல்ராஜ் கொலை வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தேயிலை சாகுபடி பாதிப்படைந்துள்ள நிலையில் வரும் நாட்களில் மழை பெய்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.







