மழையின் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குப் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல வனத்துறை 2 நாட்கள் தடை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி
பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.
இக்கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் என 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வனத்துறையின் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தை மாத பிரதோஷம் , பௌர்ணமியை முன்னிட்டு நாளை 3 ஆம் தேதி
முதல் வரும் 6ம் தேதி வரை பக்தர்களுக்குக் கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி
வழங்கப்பட்டிருந்தது.மழை பெய்தால் அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில்
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை 03 ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 04
ஆம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி
மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தற்போது
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மழையின் காரணமாகப் பக்தர்கள் யாரும் நாளை சதுரகிரி கோவிலுக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சதுரகிரி பகுதிகளிலும் அதிகாலை முதலே பரவலாகச் சாரல் மழை என்பது பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.







