சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகின்ற 25-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
இதற்கு முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அண்மைச் செய்தி: ‘14 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு’
https://twitter.com/ChennaiRmc/status/1561978785083555840
இதேபோல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








