மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் உடையார்கோயில் பகுதியில் கனமழை காரணமாக 70 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் ஒரே நாளில் 18 சென்டிமீட்டர் மழை பெய்ததால் ஆக்கூர்
உடையார்கோவில் பகுதியில் உள்ள புத்தூர்ரோடு, சின்ன தெரு, பெரிய தெரு ஆகிய இடங்களில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீர் வடிய வழி இல்லாததால் விளைநிலங்களில் புகுந்த வாய்க்கால் நீரானது, சாலைகளை கடந்து காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்து மறுபுறம் சென்று வருகிறது. பத்துக்கு மேற்பட்ட கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. தண்ணீர் புகுந்த வீடுகளில் தண்ணீரை இறைக்கும் காட்சிகளையும் காண முடிகிறது. இன்று மழை இல்லை என்றாலும்
தண்ணீர் வடியாமல் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.
கிராம மக்களுக்கு ஆக்கூர் அரசு பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மின்சாரம் இன்றி குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் இளைஞர் ஒருவர் மலைவெள்ள நீரில் சோப்பு போட்டு குளிக்கும் அவல நிலையும் உள்ளது.







