9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை நேரில் சந்தித்திலிருந்து நண்பர்களாக இருக்கிறோம் என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்thaது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்தது. தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் வந்துள்ள ரஜினிகாந்த், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்த்தார். இதையடுத்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். பின்னர் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன. மைசூரில் என்ஜினீயரிங் படிக்கும் போது, ரஜினிகாந்த்யை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம். அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.







