கோழிக்கோடு அருகே குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்.
காலநிலை மாற்றம் ஏற்படும் போது கடலில் மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அரபி கடலில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் கேரள மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோழிக்கோடு அருகே வடகரா கடற்கரை பகுதிகளில் திடீரென குவியல் குவியலாக சாளை மீன்கள் கடலில் இருந்து கரை ஒதுங்கின. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தாலும், ஒருபக்கம் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் மீன்களை கூடையில் அள்ளி சென்றனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதிகளவில் மீன்கள் கரை ஒதுங்கியதால் நாட்டு படகு மீனவர்களும் மீன்களை வலை போட்டு பிடித்து சென்றனர்.







