மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே, கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்துக் கிடங்கில் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தடுப்பூசி சம்பந்தமாக அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறினார். நாளை மறுநாள் முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெற உள்ளதாகவும், கண்காணிப்பு அறை, தடுப்பூசி அறை உள்ளிட்டவை குறித்து ஒத்திகை பார்க்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு தடுப்பு மருந்து கொடுத்த அடுத்த நாளே தடுப்பூசி போட தயார் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய அரசுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 33 லட்சம் சிரிஞ்சுகளை மத்திய அரசு கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் 17 லட்சம் சிரிஞ்சுகள் ஏற்கெனவே கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.







