5 ஜி தொழில்நுட்பத்துக்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா. இவர் தமிழில், பருவ ராகவம், நாட்டுக்கு ஒரு நல்லவன் படங்களில் நடித்துள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருக்கும் நடிகை ஜூஹி சாவ்லா, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் என அனைத்தும் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜே.ஆர்.மிதா, காணொலி வாயிலாக விசாரித்தபோது, ஜூஹி சாவ்லாவின் ரசிகர் ஒருவர், அவர் நடித்த படத்தின் ஹிட் பாடலை பாடத் தொடங்கினார். பிறகு, ’எங்கே ஜூஹு மேடம், அவங்களை பார்க்க முடியலையே?’ என்றார். இதனால் விசாரணை பாதிப்படைந்தது. எரிச்சலடைந்த நீதிபதி, அந்த ரசிகரின் குரலை மியுட் செய்யும்படி கூறினார். பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி மிதா, ’ஜூஹி சாவ்லா உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு முற்றிலும் விளம்பரத்துக்கானது. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் சட்டத்தின் செயல்பாட்டை அவமதித்ததால், அவர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கிறேன். விசாரணையின்போது இடையூறாகப் பாடல்களை பாடியது யார் எனக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.







