ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள, பழைய மாமல்லபுரம் சாலையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது. இந்த வீடுகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால், திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, 2014ஆம் ஆண்டே பணி முடிப்பு சான்று வழங்கிவிட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பணி முடிப்பு சான்றிதழ்கள் முறையான ஆய்வுக்கு பின் வழங்கப்படுவதில்லை எனவும், அவை வாங்கப்படுவதாகவும் கூறினார்.
முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பணி முடிப்பு சான்றுகளை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த புகாரை விசாரித்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.







