கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்வதற்கு அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்ய தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையர் 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் கோயில்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நியாயமானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மருத்துவ காரணங்களால் அதிக நேரம் வரிசையில் நிற்க இயலாதவர்களுக்கு தரிசனம் செய்ய பிரத்யேகமாக தரிசன நேரம் நிர்ணயம் செய்யவும், கட்டணமில்லா தரிசனத்தில் நேரம் குறிப்பிட்டு தனி டோக்கன் வழங்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.







