சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட்டம்; மத்திய செயலர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு

18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, போன்றவற்றை விளையாடுவது குறித்த வழக்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலர் பதில் அளிக்க  உயர் நீதிமன்ற மதுரை கிளை…

18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, போன்றவற்றை விளையாடுவது குறித்த வழக்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலர் பதில் அளிக்க  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

இது குறித்து நெல்லையைச் சேர்ந்த ஐயா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும்
விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, உயிரிழப்பு மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன.

இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக
விசாரணைக்கு வந்ததும். அப்பொழுது நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.