கடிகாரத்திற்கு பில் இருக்கிறதா? இனிமேல் தான் தயார் செய்ய வேண்டுமா? என அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா என அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். பிரான்ஸ் நிறுவனத்திற்காக உலகில் 500 வாட்ச்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் தலா 5 லட்சத்திற்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், ரஃபேல் வாட்ச்-ஐ வாங்கியது குறித்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். ஜபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்தது வரை, வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சொத்து விவரங்களை வெளியிடுவேன் என்றும், தமது பட்டியலில் இல்லாத சொத்தை கண்டுபிடித்தால் மொத்த சொத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தன்னை போல வருமான விவரங்களையும், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் வெளியிட தயாரா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.
எங்கோ போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாளிடம் கேட்பது எளிய கேள்விதான்.
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?
தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? என அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.