ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் குருகிராமில், கடந்த ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 31ஆம் தேதி அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ எனும் பெயரில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி குருகிராம் பகுதியில் உள்ள அனைத்துக் கோயில்களையும் சென்றடையும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேரணியை குருகிராம் பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கிவைத்தார்.
பேரணியானது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நுாஹ் மாவட்டத்தை சென்றடைந்த போது சிலர் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஊர்வலக்காரர்களை நோக்கி கற்களை வீசியதாகவும் இதனையடுத்து பேரணி நடத்தியவர்களும் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து வன்முறை நீடித்த நிலையில் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் , பைக்குகள் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை மக்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டது. நிலைமை மோசமடைந்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது.காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் , தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் காவலர்கள் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இதுவரை ஊர்க்காவல்படையைச் சேர்ந்த நீரஜ் மற்றும் குர்சேவக் , குருகாம் அஞ்சுமான் மசூதியின் துணை மதகுரு முகமது ஹாபிஸ் சயீத் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளன. பெண்கள் குழந்தைகள் உட்பட 2,500க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
மேலும் ஹரியானா மாநிலத்தில் கலவரம் நிகழ்ந்த நுஹ், பரிதாபாத் மற்றும் பல்வால், குருகிராம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளன. இதுவரை ஹரியானாவில் நடந்த வகுப்புவாத மோதல்கள் தொடர்பாக நுஹ்வில் 46, குருகிராமில் 23 உட்பட 5 மாவட்டங்களில் மொத்தம் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வன்முறை தொடர்பாக 93 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வகுப்புவாத மோதலின் போது விடுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லாவை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) டிவிஎஸ்என் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரான வருண் சிங்லா, தற்போது நுஹ்வில் இருந்து மாற்றப்பட்டு பிவானி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வன்முறை நடைபெற்ற போது கூடுதல் பொறுப்பை வகித்த நரேந்திர பிஜர்னியா, நுஹ்வின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி. நரேந்திர பிஜர்னியா, பிவானி, ஓஎஸ்டி கூடுதல் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றியவர். நுஹ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு நிலையைப் பராமரித்து பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவர் நுஹ்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மோதல் வெடித்தபோது எஸ்பி வருண் சிங்லா விடுப்பில் சென்று வியாழக்கிழமை பணிக்கு திரும்பியிருந்தாலும், அவரின் அனைத்து பொறுப்புகளையும், எஸ்.பி. நரேந்திர பிஜர்னியாதான் கவனித்து வந்தார். இந்த நிலையில்தான் நூஹ் மாவட்டத்தில் வகுப்புவாத மோதலின் போது விடுப்பில் இருந்த காவல்துறை உயர் அதிகாரி வருண் சிங்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நூஹ்வில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது;
இதற்கிடையில், வியாழக்கிழமை நுஹ் நகரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. “மக்கள் தினசரி அத்தியாவசிய பொருட்களை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வாங்கலாம்” என்று நுஹ் துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் கூறினார். இன்று காலை 10 மணி முதல் மூன்று மணி நேரம் ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 5 வரை இடைநிறுத்தப்பட்ட நுஹ் மற்றும் மாநிலத்தின் வேறு சில இடங்களில் மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளும் நேற்று மதியம் 1 மணி முதல் மூன்று மணி நேரத்திற்கு வழங்கப்பட்டன.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக தேவையில்லாத ஆத்திரமூட்டும் விஷயங்களைப் பரப்புவதைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களை கண்காணிக்க ஹரியானா அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா











